ஈரோடு, மூலப்பாளையத்தில் உள்ள என்.ஜி.ஜி.பி (NGGP) காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பூபதி ராஜா (25).
பூபதி ராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடன் கல்லூரியில் படித்த மதுமதி (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பூபதி ராஜாவுக்கும் - மதுமதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், பூபதி ராஜா, சில தினங்களுக்கு முன்பு தனது நண்பருடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றிருந்தார்.
சுற்றுலா சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு ஈரோட்டுக்கு திரும்பினார் பூபதி ராஜா. அப்போது, பூபதிக்கும் , மனைவி மதுமதிக்கும் இடையே சுற்றுலா சென்று வந்தது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த மதுமதி, பூபதி ராஜா உடன் கோபித்துக்கொண்டு, அருகில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்று இரவு தூங்கியுள்ளார்.
மதுமதி கோபித்துக் கொண்டு அவருடைய தோழியின் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த பூபதிராஜா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபதி ராஜாவின் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
